சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் அரசு விழாவில் கலந்து கொண்டு பேசிய, அமித் ஷா ரூ.61,843 கோடியில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்ட பணி, வல்லூரில் ரூ.900 கோடியில் இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோலிய முனையம் என்று பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.
சென்னைக்குக் குடிநீா் வழங்கும் வகையில் புதிய நீா்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சென்னை குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள புதிய நீா்த்தேக்கத்தை அமித் ஷா இன்று தொடக்கி வைத்தார்.
“உலகிலேயே மிகத் தொன்மையான மொழியான தமிழில் உரையாற்ற எனக்கும் ஆசைதான். ஆனால், எனக்கு தமிழ் தெரியாது, அதனால் தமிழில் உரையாற்ற முடியாதது வருத்தமளிக்கிறது. தமிழில் பேச முடியாததற்கு முதலில் உங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்,” என்று அமித் ஷா தனது உரையைத் தொடங்கினார்.
கொரோனாவிலிருந்து குணமடைவோரின் தேசிய விகிதத்தை விட தமிழகத்தில் குணமடைவோரின் விகிதம் அதிகம். தமிழக முதல்வர், துணை முதல்வரின் நிர்வாகத்தின் கீழ், தமிழகம் கொரோனாவை சிறப்பாக சமாளித்து வருகிறது என்றார்.
மேலும், நாட்டின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது. கொரோனாவை எதிர்த்து அரசுகள் மட்டும் போராடவில்லை. 130 கோடி இந்தியர்களும் போராடி வருகிறார்கள் என்றார்.
நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவதை 2024-ஆம் ஆண்டுக்குள் உறுதி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.