பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் என சிபிஐ தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் சிபிஐ மேற்கொண்ட விசாரணை தொடர்பான தகவலைக் கேட்டு ஆளுநர் அலுவலகத்தில் இருந்து எந்தக் கடிதமும் வரவில்லை எனவும் சிபிஐ தெளிவுபடுத்தி உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யவேண்டும் எனும் கோரிக்கை வலுத்து வருகிறது. குறிப்பாக பேரறிவாளன் விடுதலை செய்யப்பட வேண்டுமென விஜய் சேதுபதி, ஆர்யா உள்ளிட்ட நடிகர்களும் குரல் கொடுத்துள்ளனர்.
தம்மை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில் சிபிஐ தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ராஜீவ் கொலை சதியில் பேரறிவாளனின் பங்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பேரறிவாளனை விடுவிக்கப் பரிந்துரைக்கும் தமிழக அரசின் தீர்மானம் மற்றும் அவரது கருணை மனு குறித்து ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கும் சிபிஐக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று அந்த அமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொண்ட விசாரணை குறித்து எந்தவிதத் தகவலையும் வெளியிட இயலாது என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.