திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் தம்முடைய மகனை போலிசார் காரணம் எதுவும் கூறாமல் அழைத்துச் சென்றதை அடுத்து, போலிசார் முன்னிலையிலேயே பெண் ஒருவர் தீக்குளித்தார்.
சுத்தமல்லி பகுதியின் சத்யாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா. அவரது கணவர் தர்மராஜ். அவர்களுக்கு பிரசாந்த், பிரதீப் என இரு மகன்கள் இருக்கின்றனர். மகன்கள் இருவரும் கூலி வேலை செய்பவர்கள் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் எதிர் வீட்டில் உள்ள பெண்ணை பிரதீப் காதலிப்பதாக கூறி பாலியல் தொந்தரவு செய்ததாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து தற்போதுதான் வெளியில் வந்திருக்கிறார்.
இந்நிலையில், நேற்று மாலை ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக பிரதீப் வீட்டுக்கு சென்ற சுத்தமல்லி போலிசார் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது வீட்டில் உள்ளவர்களிடம் எந்த காரணத்தையும் போலிசார் தெரிவிக்கவில்லை. இன்று அதிகாலை பிரதீப்பின் அண்ணன் பிரசாந்தையும் விசாரணைக்கு போலிசார் அழைத்ததாகவும் இதனைத் தட்டிக்கேட்ட தாய் சகுந்தலாவை போலிசார் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி காவலர்கள் முன்னிலையிலேயே தீக்குளித்தார் சகுந்தலா. அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தனார் போலிசார். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் சுத்தமல்லி காவல் நிலையத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார் . பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
சத்யா நகர் பகுதியில் ஒரு திருட்டு வழக்கில் பிரதீப் குற்றவாளியாக கருதப்படுவதாகவும் அந்த வழக்கின் தொடர்பிலான மடிக்கணினி ஒன்று பிரதீப் வீட்டில் உள்ளதாகவும் குறிப்பிட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன், அதனை பறிமுதல் செய்ய போலிசார் சென்றபோது சகுந்தலா தீக்குளித்ததாகக் குறிப்பிட்டார்.
சம்பவ இடத்தில் சகுந்தலாவின் மூத்த மகன், அவரது சகோதரர் ஆகியோர் உடன் இருந்ததாகவும் சம்பவத்தின் தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.