புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் தவசி, சிகிச்சை பலனின்றி நேற்று (நவம்பர் 23) உயிரிழந்தார்.
முரட்டு மீசை, கம்பீர தோற்றத்துடன் நகைச்சுவை கலந்து திரையில் தோன்றி ரசிகர்களை சிரிக்கச் செய்த நடிகர் தவசி, புற்று நோய்க்கு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு 8.15 மணியளவில் உயிரிழந்தார். இந்த தகவலை அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் சரவணன் உறுதிப்படுத்தினார்.
தமிழில் அவர் சுமார் 30 படங்களில் நடித்திருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியுடன் இணைந்து குறி சொல்லும் கோடங்கியாக நடித்தது இன்றளவும் மக்களால் பெரிதும் ரசிக்கப்படுகிறது.
கொரோனா பொது முடக்கத்துக்கு முன்பு வரை நடிகர் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார்.
ராசாத்தி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தபோது விபத்தில் சிக்கிய தவசிக்கு புற்று நோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவருக்கு புற்று நோய் தீவிரம் அடைந்ததால் அவரது உடல் மெலியத் தொடங்கியது. எலும்பும் தோலுமாக பரிதாபமாக காட்சியளித்த தவசியின் புகைப்படமும் உதவி கோரிய அவரது காணொளியும் சமூக ஊடகங்களில் பெரிதும் பரவியது.
இந்த நிலையில், மதுரை நரிமேட்டில் உள்ள திமுக எம்எல்ஏ சரவணனுக்கு சொந்தமான மருத்துவமனையில் தவசி சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இலவச சிகிச்சை தருவதாக எம்எல்ஏ சரவணன் தெரிவித்திருந்தார்.
அவருக்கு நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி, சிம்பு ஆகியோர் உதவி செய்தனர்.
தமது காணொளியில், தமிழ் துணை நடிகர்களுக்கு மருத்துவ வசதி வழங்க தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்களின் துயர் துடைக்க அரசு உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
தவசியின் உடல் திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறையில் உள்ள அவரது சொந்த கிராமத்திற்கு திங்கட்கிழமை இரவு கொண்டு செல்லப்பட்டது.
பாரதிராஜா இயக்கத்தில் கிழக்கு சீமையிலே படத்தில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய தவசி, கடந்த 30 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.