முழு கொள்ளளவை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு; கொட்டும் மழையில் ஏரியைப் பார்வையிட்ட முதல்வர்

2 mins read
36a47453-6948-4872-9fde-a29c0cee1425
கொட்டும் மழையில் செம்பரம்பாக்கம் ஏரியைப் பார்வையிட்ட தமிழக முதல்வர் பழனிசாமி. படம்: தமிழக ஊடகம் -

நிவர் புயல் கரணமாக சென்னையில் கனத்த மழை பொழிந்து வரும் நிலையில், மாநகருக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி கிட்டத்தட்ட அதன் முழு கொள்ளளவை எட்டியிருப்பதாலும் தொடர்ந்து மழைப்பொழிவு நீடிக்கும் என்பதாலும் இன்று ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவான 24 அடியில் தற்பொழுது 22 அடி அளவில் நீர் நெருங்குவதால் இன்று நண்பகல் 12 மணி அளவில் சுமார் 1,000 கன அடி அளவிற்கு உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதாக பொதுப்பணித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இன்று மதியம் 12 மணி அளவில் ஏரி திறக்கப்பட்டது. அதனையடுத்து, காணு நகர், சூலை பள்ளம், திடீர்நகர், அம்மன் நகர், பர்மா காலனி, ஜாபர்கான்பேட்டை, கோட்டூர்புரம், சித்ரா நகர் மற்றும் அடையாறு ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அருகில் உள்ள சென்னை மாநகராட்சியின் நிவாரண மையங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி சார்பில் 169 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி நிவர் புயல் இன்று இரவு வலுவான புயலாக கரையை கடக்கும் நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க தேவையான நிவாரண முகாம்கள் மற்றும் இதர பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உதவி தேவைப்பட்டால் கீழ்க்கண்ட உதவி எண்களை அழைக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறை உதவி எண்கள்: 044-25384530, 044-25384540.

கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு: 9445190210

வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு: 9445190211

ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு: 9445190212

அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு: 9445190213

குறிப்புச் சொற்கள்