நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார் புதுவை முதல்வர் நாராயணசாமி. அவருடன் அரசு அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.
புயல் பாதிப்பு குறித்து மத்திய அரசிடம் நிவாரணம் கேட்கப்படும் என்றும் தெரிவித்துள்ள முதல்வர் நாராயணசாமி, புதுவையில் புயல் பாதிப்பைக் கணக்கெடுத்த பிறகு நிவாரணம் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
புதுவையில் புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் வே. நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் 23 செ.மீ. அளவுக்கு கனமழை பெய்துள்ளது. உயிரிழப்பு பற்றிய தகவல் எதுவும் இல்லை. இதுபோன்ற கனமழையை நாங்கள் இதுவரை கண்டதில்லை. அடுத்த 12 மணி நேரத்தில் நகரில் மின் இணைப்பு மீண்டும் திரும்பும்.
“இந்த நிவர் புயலைத் தொடர்ந்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு வரும் 28ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
“மீனவர்களின் படகுகள், வலைகள் எப்படி பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் கணக்கெடுப்பு எடுக்கப்படும்.
“இரவு நேரத்தில் புயல் தாக்கியதால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருந்ததால் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. புயல் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்திய பின்னர் நிவாரணம் குறித்து முடிவு செய்யப்படும். நிவாரண முகாம்களில் 2,000க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்,” என்று கூறினார்.