மதுரையில் நேற்றிரவு பெய்த கனமழை கழிவு நீருடன் கலந்ததில் வைகை ஆற்றில் ஏற்பட்ட விஷ நுரை செல்லூர் பாலத்திற்கு வெளியே வந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியது.
தமிழகத்தில் வங்க கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி மற்றும் மரக்காணம் இடையே கரை கடந்து வடமேற்கு நோக்கி ஆந்திரா வழியே சென்றது.
இந்த புயலால் தமிழகத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். புயலை தொடர்ந்து வேலூர், சென்னை உள்ளிட்ட நகரங்களில் மட்டுமின்றி, நேற்று இரவு மதுரையில் தொடர்ந்து 2 மணிநேரம் வரை கனமழை பெய்தது.
இதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்கு வைகை ஆற்றில் கலந்தோடிய நிலையில், ஆற்றில் கழிவு நீரும் கலந்தது. இதனால் நேற்றிரவு வைகை ஆற்றின் ஒரு பகுதி மற்றும் செல்லூர் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் விஷ நுரை மிதந்தது.
இந்த நுரை செல்லூர் பாலத்தின் மீதும் சுமார் ஆள் உயரத்துக்குக் காணப்பட்டது. இதனால் அந்த வழியே வாகனத்தில் செல்வோருக்கு இடையூறு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து நுரையைக் கலைத்தனர்.

