திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று (நவம்பர் 29) அதிகாலை 4 மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இன்று மாலையில் 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், இந்த ஆண்டு தீப திருவிழாவில் நேரடியாகப் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் 10ம் நாளான இன்று அதிகாலை மூன்றரை மணிக்கு அருணாச்சலேஸ்வரர் கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்து உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட அனைத்து சன்னிதானங்களிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இன்று மாலை 6 மணியளவில் சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படும்.
அதேநேரத்தில் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியின்மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
இந்து சமயத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வுக்காக ‘மூலவர்க பரம்பரா’ (MULAVARGA PARAMPARA) அமைப்பினர், நிகழ்வின் நேரலைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். சிவபெருமானின் ஆறாவது முகமாக ‘அதோமுகத்தை’ப் பிரதிபலிக்கும் இறுதி தீபம் திருவண்ணாமலையின் உச்சியில் ஏற்றப்படும் நிகழ்வாக இது உள்ளது.
சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.25 மணிக்கு தீபம் ஏற்றப்படுவதை இந்த நேரலை காணொளியில் நீங்கள் ‘மூலவர்க பரம்பரா’ பேஸ்புக் மற்றும் யூடியுப் பக்கங்களிலும் மலேசியாவின் ‘ஏஷ்ட்ரோ’ ஒளிவழியிலும் காணலாம்.