கொவிஷீல்டு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதால் மோசமான நரம்பு, உளவியல் பிரச்சினைகளுக்கு ஆளாகி, அதன் காரணமாக தனது உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டதாகக் கூறி ரூ.5 கோடி இழப்பீடு கோரியுள்ளார் சென்னை தன்னார்வலர் ஒருவர்.
இதற்குப் பதிலடியாக, “பொய்யான புகார்களை முன்வைத்துள்ள ஆடவரிடம் ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடரப்படும். தன்னார்வலரின் புகாரில் உள்நோக்கம் உள்ளது,” என்று சீரம் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் அனுமதியுடன் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் கொவிஷீல்டு பரிசோதனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த 40 வயது தன்னார்வலர் ஒருவருக்கும் கடந்த மாதம் 1ஆம் தேதி கொவிட் மருந்து பரிசோதிக்கப்பட்டது.
ஆனால், இந்தத் தடுப்பூசியால் தனக்கு கடுமையான நரம்பு, உளவியல் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்பு கள் ஏற்பட்டதையடுத்து ரூ. 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், சீரம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தன்னார்வலரின் மருத்துவ நிலை குறித்து அனுதாபப்படுகிறோம். தன்னார்வலரின் உடல் நலப் பாதிப்புக்கும் தடுப்பு மருந்து பரிசோதனைக்கும் முற்றிலும் எந்த தொடர்பும் கிடையாது. தற்போது விடுக்கப்பட்டுள்ள நோட்டீஸ் தவறான கருத்துகளையும் உள்நோக்கத்தையும் கொண்டது. தன்னார்வலர் தனக்கு ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பை கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையுடன் தவறாகத் தொடர்புபடுத்துகிறார்.
“ஏனெனில், உடல்நலப் பிரச்சினைகள் தடுப்பூசி சோதனையால் ஏற்படவில்லை என மருத்துவக் குழுவினர் தன்னார்வலரிடம் விளக்கிய போதிலும், நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளதால், ரூ. 100 கோடி இழப்பீடு கோர உள்ளோம்” என்று கூறப்பட்டுள்ளது.
தடுப்பூசி சோதனைக்கு உட்படும் ஒருவர் அதன் விளைவுகளை தாமே ஏற்கவேண்டும் என அந்த ஆடவ ருக்கு மருத்துவக் குழுவினர் முன்பே அறிவுறுத்தி இருந்ததாகவும் சீரம் நிறுவனம் கூறியுள்ளது.