திமுக மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, ஞாயிற்றுக்கிழமை எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.
‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற கருப்பொருளுடன் திமுகவின் பிரசாரம் தொடங்கப்பட்டு இருக்கிறது. எடப்பாடியில் இருக்கும் கொங்கனாபுரம் என்ற கிராமத்தில் அவர் பல பெண்களையும் சந்தித்து குறைநிறைகளைக் கேட்டறிந்தார்.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, மாதர் சுய உதவிக் குழுக்களை அதிமுக அரசாங்கம் அழித்து வருவதாக குறை கூறினார்.
“இந்தக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள், கடன் கேட்டு வங்கிக்குச் செல்லும்போது அவர்களை மரியாதையுடன் நடத்துவதில்லை.
“தமிழ் பேசத் தெரியாத ஊழியர்களைச் சில வங்கிகள் நியமித்து இருக்கின்றன.
“கொவிட்-19 பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி சுய உதவிக் குழுக்களுக்குக் கொடுக்கப்பட்ட கடனை ரத்து செய்யும்படி கேட்டு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். ஆனால் எந்த பதிலும் இல்லை,” என்று கனிமொழி தெரிவித்தார்.