எந்தவொரு விஷயத்தையும் புது மாதிரியாக யோசித்துசெயல்படுத்தும்போது, அது மக்களை எளிதில் சென்றடைகிறது என்று கூறும் கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீசன், அவரது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியலைத் திருத்தும் முகாம் பற்றிய விவரங்களை திருமண அழைப்பிதழ் பாணியில் அச்சிட்டு வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வரும் நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் கடந்த 16ஆம் தேதி முதல் இம்மாதம் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
18 வயது நிரம்பியோர் தங்கள்பெயரை இப்பட்டியலில் சேர்க்கலாம். ஏற்கெனவே இடம் பெற்றிருக்கும் வாக்காளர் தங்களின் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதலை இதில் மேற்கொள்ளலாம்.
இம்முகாம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடலூர் கோட்டாட்சியர் அலுவலகம் சார்பில் ‘வாக்காளர் அழைப்பிதழ்’ என்ற தலைப்பில் அழைப்பிதழ் அச்சிடப்பட்டு, அப்பகுதி மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
பார்ப்பதற்கு திருமண அழைப்பிதழ் போல இருப்பதால் அது காண்போரைக் கவர்கிறது என்கின்றனர் அதிகாரிகள்.