விழுப்புரம் மாவட்டத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் வி.ஏ.டி.கலிவரதன், தன்னை ஓர் அறையில் அடைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக அக்கட்சியின் மகளிர் அணியின் பொதுச் செயலாளர் காயத்ரி கட்சித் தலைமைக்குப் புகார் அளித்துள்ளார்.
மகளிர் அணி பொதுச் செயலாளர் காயத்ரி என்பவர் கட்சியின் தலைமைக்கு அளித்த புகார் கடிதம் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
அந்தக் கடிதத்தில், “மாவட்ட பாஜக தலைவரான வி.ஏ.டி கலிவரதன் கட்சியில் தனக்கு பதவி கொடுப்பதாகக் கூறி ரூ.5 லட்சம் பணம் வாங்கிக்கொண்டதுடன், தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார். அதைப்பற்றி வெளியில் சொன்னால் என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்” என்று எழுதி காயத்ரி என்ற பெயரில் கையெழுத்திடப்பட்டிருந்தது.
ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தபோதும், அந்தக் கடிதம் குறித்து காயத்ரி அப்போது எந்தக் கருத்தையும் தெரிவிக்காத நிலையில், அது பொய்ப் புகார் என்று ஊடகங்களுக்கு பேட்டியளித்திருந்தார் வி.ஏ.டி கலிவரதன். அதேபோல காயத்ரியும், கலிவரதனும் பேசிக்கொள்வதாக ஆடியோ ஒன்று வெளியானது.
இந்த நிலையில் காயத்ரி, நேற்று வி.ஏ.டி.கலிவரதன் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார் என்று விழுப்புரம் மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்திருக்கிறார். அந்த புகார் கடிதத்தில், “தற்போது விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க தலைவராக இருக்கும் வி.ஏ.டி. கலிவரதன், எனக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அணித் தலைவர் பதவி வாங்கித் தருகிறேன் என்று கூறி என்னிடம் ரூ. 5 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டார்.
முடக்குவாத சிகிச்சைக்காக நான் சென்னை சென்றுகொண்டிருந்தபோது, என்னை வழிமறித்து, நல்ல மருத்துவரிடம் கூட்டிச் செல்வதாகக் கடத்திச்சென்று தெரியாத ஒரு இடத்தில் என்னை அடைத்து வைத்தார். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அந்த அறைக்கு வந்த வி.ஏ.டி கலிவரதன் `இப்போ என் ஆசைக்கு இணங்கவில்லை என்றால் உன்னையும் உன் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டினார்.
“அதன்பிறகு என்னை பாலியல் வன்முறை செய்த அவர், இரண்டு நாள்கள் என்னை அடைத்துவைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார்.
“அதுமட்டுமல்லாமல் அதனைப் படம் எடுத்து வைத்திருப்பதாகவும், அதனால் அவர் கூப்பிடும்போதெல்லாம் அவரது ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் வீடியோவை அனைவருக்கும் அனுப்பிவிடுவேன் என்றும் மிரட்டினார். நான் கொடுத்த பணத்தையும் திருப்பிக்கொடுக்காத அவர், பாஜக-வில் இப்போது ரொம்ப பலமா இருக்கேன்.
“என்னை யாரும் ஒன்னும் செய்துவிட முடியாது. மறுபடியும் என்னிடம் பணம் கேட்டால் குடும்பத்தையே கொலை செய்துவிடுவதாக தொடர்ச்சியாக மிரட்டி வரும் அவர் மீது நடவடிக்கை எடுங்கள்,” என்று புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.