புரெவி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அரபிக்கடலில் மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ள 3,000 மீீனவர்களை மீட்க தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் கர்நாடக மாநிலம், மங்களூருக்கு விரைந்துள்ளனர்.
பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையில் புரெவி புயல் இப்போது இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனத்த மழை பொழிந்து வருகிறது.
நிவர் புயலைப் போலவே புரெவி புயலும் வந்த இடம் தெரியாமல் மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் சென்றுவிடவேண்டும் என்பதே மக்கள் பலரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் 3,000 மீனவர்கள் உள்ளனர்.
நிவர் புயல் பாதிப்புக்குப் பிறகு கடலுக்குச் சென்ற இவர்கள், 15 நாட்கள் வரை கடலில் தங்கி, மீன் பிடித்துவிட்டு கரை திரும்புவர்.
தற்போது, புரெவி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ளவர்களைக் கரை திரும்பும்படி கூறப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி ஆட்சியர் அரவிந்த் செய்தியாளர்களிடம் கூறுைக யில், “புயல் எச்சரிக்கையை அடுத்து இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படகுகள் கரை திரும்பிவிட்டன. இன்னும், 161 படகுகளில் உள்ள மீனவர்கள் கரை திரும்ப வேண்டும். கடலோர காவல் படை, மீன்வளத் துறை மூலம் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அருகில் உள்ள துறைமுகங்களில் கரை ஒதுங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
“வங்கக் கடலில் உருவான புரெவி புயல் நாளை 4ஆம் தேதி கன்னியாகுமரி-பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
“இதையடுத்து, குமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்பட்டணம், தூத்தூர், வள்ளவிளை பகுதியில் இருந்து 161 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை புயல் வருவதற்குள் பிற மாநிலங்களில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் கரைசேர்ப்பதற்கான முயற்சியில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
“கப்பல்படை, விமானப்படை மூலம் லட்சத்தீவு, கர்நாடகா, கேரளா ஆழ்கடல் பகுதியில் தவிக்கும் மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை தகவல்களைக் கொண்டு சேர்க்கும் முயற்சியும் நடந்து வருகிறது,” என்று கூறினார்.