நிவர் புயலால் பசியால் வாடிய மக்களுக்கு காய்கறி பிரியாணியை பல பகுதிகளிலும் வழங்கிய அமைச்சர் ஜெயக்குமாரை சென்னை மக்கள் மனதாரப் பாராட்டி வருகின்றனர்.
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததை அடுத்து பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
தலைநகர் சென்னை தண்ணீர் நகரமாய் மாறிப்போனது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் சமைக்கமுடியாமல் வட சென்னை மக்கள் உணவின்றி திண்டாடினர்.
இதையடுத்து, வீதிவீதியாக நிவாரணப் பணிகளில் அமைச்சர் ஈடுபட்டபோது, குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பசியால் வாடுவதை அறிந்தார்.
இந்நிலையில், தனது சொந்த செலவில் காய்கறி பிரியாணியை பல பகுதிகளிலும் சமைப்பதற்கு உத்தரவிட்ட அமைச்சர் ஜெயக்குமார், அதை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு தன் கையாலேயே பலருக்கும் விநியோகித்ததைக் கண்டு சென்னை மக்கள் நெகிழ்ந்து போனார்கள்.
தமிழகத்தில் இந்தக் காலத்திலும் இப்படியும் ஒரு அமைச்சர் இருப்பது என்பது ஆச்சர்யமான தகவல்தான் என்கின்றனர் பொதுமக்கள்.
வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு அமைச்சர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதாகவும் மக்கள் கூறியுள்ளனர்.