துபாயில் இருந்து சென்னைக்கு வந்த சிறப்பு விமானத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான 300 கிராம் தங்கத்தை முதுகில் வைத்து கட்டுப் போடுவது போல் போட்டு பயணிகள் மூவர் கடத்தி வந்தனர்.
இதைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், பயணிகள் மூவரையும் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் ராஜன் சௌத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்தனர்.
அப்போது, சந்தேகப்படும்படியாக நடந்துகொண்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது அனஸ், 27, சென்னையைச் சேர்ந்த ஜும்மாகான், 47, முகமது ரஃபி, 46, ஆகிய மூவரையும் அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதித்தனர்.
அவர்களில் இருவரது முதுகு சற்று வீங்கி இருந்தது குறித்து அதிகாரிகள் கேட்டதற்கு, முதுகில் சுளுக்கு பிடித்துக்கொண்டதால் கட்டுப் போட்டுள்ளதாகக் கூறினர். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் கட்டைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் தங்கக் கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொருவர் தனது கால்சட்டைக்குள் மறைத்து வைத்து தங்கத்தைக் கடத்திவந்ததும் தெரியவந்தது.
துபாயில் இருந்து சென்னைக்கு முதுகில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 300 கிராம் தங்கம். இதன் மதிப்பு ரூ.15 லட்சம் என்று கூறப்படுகிறது.

