வரும் சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியும் மக்கள் நீதி மய்யம் கட்சியும் கூட்டணி அமைக்க உள்ளன. தேர்தல் சமயத்தில் இவ்விரு கட்சிகளுமே கணிசமான வாக்குகளைப் பெற்று வருவதால், இரு கட்சிகளும் இணைந்து கைகோப்பது கூடுதல் பலத்தைத் தரும் என்பதால் இணைய முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்குவதற்கு முன்பாக கமல் ஒரு சிலரை சந்தித்துப் பேசினார். அவர்களுள் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஒருவர்.
கொள்கை ஒத்துப்போனால் கூட்டணி அமையும் என்று தங்களது சந்திப்பின்போது அப்போதே சொல்லிக்கொண்ட கமலும் சீமானும் ரஜினியின் இப்போதைய அரசியல் வருகைக்கு பின்னர் தங்களின் கொள்கைகள் ஒத்துப்போவதை உணர்ந்துள்ளனர்.
அத்துடன் சிறுசிறு உதிரிக் கட்சிகளையும் தங்களது கூட்டணியில் இணைக்க தான் பேசுவதாக சீமான் சொல்ல, வாக்கு வங்கி அதிகமுள்ள ஒரு பெரிய கட்சியைக் கூட்டணிக்குள் இழுத்து வருகிறேன் என்று சீமானுக்கு வாக்கு கொடுத்திருக்கிறாராம் கமல்.
சட்டசபைக்குள் நமது பங்களிப்பு இருக்கவேண்டும். அதற்காக என்னவெல்லாம் செய்வது என்ற தீவிர ஆலோசனையில் கமல் இருந்து வருகிறார் என்கிறார்கள் நாம் தமிழர் வட்டாரத்தினர்.
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து நீக்கப்பட்ட சில நிர்வாகிகளும் இதை உறுதிப்படுத்தி உள்ளனர்.