இன்று ரஜினியின் பிறந்த நாள். இந்த நாளை முன்னிட்டும் அவரது அரசியல் பயணம் தங்கு தடையின்றி சுமூகமாகச் சென்று வெற்றியைப் பெறவும் திருவண்ணாமலை அருணகிரி நாதர் கோவிலில் யாகம் நடத்தப்பட்டதாக ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணா கூறியுள்ளார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரஜினியும் மக்களும் நலமாக இருக்கவேண்டும் என யாகம் நடத்தியதாகவும் கடவுள் விருப்பப்பட்டால் ரஜினி திருவண்ணாமலையில் போட்டியிட வாய்ப்புள்ளது,” என்றும் கூறினார்.
இந்நிலையில் ரஜினி கட்சியினர் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் தங்களது கட்சியைப் பதிவு செய்வதற்காக அங்கு விரைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன.
இதற்காக ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனா மூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியன், ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள் பலரும் டெல்லி சென்றுள்ளதாகக் கூறப்பட்டது.
அத்துடன், கட்சியின் பெயரும் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும் மொத்தம் ஐந்து பெயர்களில் ஒன்றை ரஜினி தேர்வு செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் ரஜினியின் வழக்கறிஞர்களும் மன்ற நிர்வாகிகளும் கட்சியைப் பதிவு செய்யும் வேலையில் நேற்று ஈடுபட்டு இருந்ததாகவும் தகவல்கள் கூறின.
அத்துடன், கட்சிக் கொடியும் தயாராகிவிட்டதாகவும் வெள்ளை நிறத்தில் நடுவில் வட்டமான இடத்தில் ரஜினியின் புகைப்படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து தெருக்களிலும் கட்சிக் கொடியை நிறுவ ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.