தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமது பழைய தளபதியான சத்தியநாராயணனை தயாராகும்படி நடிகர் ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளது அவரது ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
ரஜினி ரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவராக இருந்தவர் சத்தியநாராயணன். 2010ஆம் ஆண்டிற்கு முன்பு வரை ரசிகர் மன்றம் தொடர்பான அனைத்து பொறுப்புகளும் அவரிடமே இருந்தன. பிறகு அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.
இதனால் ரஜினி ஆரம்பிக்கும் புதிய கட்சியில் சத்தியநாராயணனுக்கு நிச்சயம் பொறுப்புகள் இருக்காது என்றே பேச்சுகள் அடிபட்டன. ஆனால் திடீர் திருப்பமாக நேற்று ரஜினி வீட்டில் நடைபெற்ற முக்கிய ஆலோசனையில் சத்தியநாராயணன் கலந்துகொண்டார்.
எந்தெந்த மாவட்டத்தில் ரஜினிக்கு எவ்வளவு ரசிகர்கள் மன்ற உறுப்பினர்களாக உள்ளனர் என்கிற தகவலும் சத்தியநாராயணனுக்கு விரல் நுனியில் உள்ளது.
கட்சி தொடர்பாக ரஜினி பல்வேறு முடிவுகளை எடுக்க சத்தியநாராயணன் பெரும் உதவியாக இருப்பார் எனக் கூறப்படுகிறது.