சின்னத்திரை பிரபலம் சித்ரா (படம்) நட்சத்திர விடுதி ஒன்றில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியது. தற்கொலை என்றபோதிலும் சித்ராவின் சாவில் மர்மம் நீடிக்கிறது. அவர் தற்கொலை செய்யவில்லை என சித்ராவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சித்ரா தற்கொலை செய்யும் முன் அவரது கணவர் ஹேமந்த் தினமும் மது அருந்திவிட்டு தேவையின்றி சித்ராவின் மேல் சந்தேகம் அடைந்து அவரை துன்புறுத்தியதாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரம்பலூரில் ஒரு கடைத் திறப்புவிழாவுக்குச் சென்றபோது அங்கு அறிமுகமான அரசியல் பிரபலம் சித்ராவின் கைபேசிக்கு அன்றாடம் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் வரும் புத்தாண்டை தம்முடன் கொண்டாட வேண்டும் என அவர் தகவல் அனுப்பி தொந்தரவு செய்ததாகவும் போலிசார் சந்தேகிக்கின்றனர்.
அந்த சந்தேகத்தை உறுதிசெய்வதுபோல சித்ராவின் கைபேசி யிலிருந்த அழைப்பு விவரங்களும் வாட்ஸ்அப் தகவல்களும் அழிக்கப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர். இதனால் அரசியல் முக்கிய புள்ளிகளுக்கும் மரணத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
அழிக்கப்பட்ட விவரங்களை மீட்க இணையக் குற்ற விசாரணை போலிசார் முயன்று வருகின்றனர்.
இந்நிலையில், சித்ரா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் யார் தவறு செய்திருந்தாலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

