இந்தியாவின் டாக்சி சேவை வழங்கும் நிறுவனமான ஓலா, உலகின் மிகப் பெரிய மின்ஸ்கூட்டர் ஆலையை தமிழகத்தில் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி 2,354 கோடி ரூபாய் முதலீட்டை ஓலா தமிழகத்தில் செய்கிறது. தமிழக அரசுடன் இது குறித்த இணக்கக் குறிப்பில் ஓலா கையெழுத்திட்டுள்ளது. இந்த மின்ஸ்கூட்டர் ஆலையில் ஆண்டுக்கு இரண்டு மில்லியன் வாகனங்களைத் தயாரிக்க ஓலா முடிவு செய்துள்ளது. இதற்காக சில மாதங்களுக்கு முன்பு பல மாநிலங்களில் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக அந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதனால் 2,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் தயாரிக்கப்படும் இந்த மின்ஸ்கூட்டர்கள் இந்திய போக்குவரத்து சந்தையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் ஐரோப்பா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட பிற சந்தைகளுக்கு விற்பனைக்கு வரும் என்று ஓலா தெரிவித்துள்ளது.
கைபேசி செயலி மூலம் இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் தனது வாகன சேவையை ஓலா வழங்கி வருகிறது. ஓலா நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய வாகன வணிகம் சார்ந்த நிறுவனமாகும்.