தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்காத கல்லூரிகளுக்கு அரசு கடும் எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றுப் பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. பத்து மாவட்டங்களில் புதிதாக கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் பதிவாகி உள்ளது.
கிருமித்தொற்றுப் பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் புதிதாக கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை நாள்தோறும் குறைந்து வருகிறது.
கடந்த ஒரு மாதமாக தினமும் பதிவாகும் புது நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கும் குறைவாக உள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் புதிதாக 1,132 பேருக்கு கிருமி தொற்றி இருப்பது கண்டறியப்பட்டது.
மாநிலம் முழுவதும் இதுவரை 801,161 பேர் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 779,291 பேர் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 11,919ஆக உள்ளது.
இந்நிலையில் சில மாவட்டங்களில் புதிய பாதிப்பு சம்பவங்கள் ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வருவது மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே சென்னை ஐஐடி கல்வி நிலையத்தில் மேலும் எட்டு மாணவர்களுக்கு கொரோனா கிருமி தொற்றியது உறுதியானது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 191ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்காத கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

