போலி ‘நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்’ சமர்ப்பித்த விவகாரத்தில் மாணவியையும், அவரது தந்தையையும் கைது செய்ய காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது.
இம்மாதம் 7ஆம் தேதி நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வின்போது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த தீக்சா எனும் மாணவி போலியான நீட் மதிப்பெண் சான்றிதழை அளித்தது தெரியவந்தது.
இதையடுத்து, மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் செல்வராஜன் சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக மாணவி தீக்சா, பல்மருத்துவரான அவரது தந்தை பாலச்சந்திரன் ஆகியோர் மீது 6 பிரிவுகளில் போலிசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் தொடர்பில் விசாரணைக்கு முன்னிலையாகும்படி தந்தைக்கும் மகளுக்கும் கடந்த 15ஆம் தேதி சென்னை பெரியமேடு போலிசார் அழைப்பாணை அனுப்பினர். அவர்கள் முன்னிலையாகாததால் 2வது முறையாகவும் அழைப்பாணை அனுப்பப்பட்டது. அதற்கும் எந்த பதிலும் பெறப்படாத நிலையில், மருத்துவர் பாலச்சந்திரன் தலைமறைவாகி இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.