கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு அனுமதித்துள்ளது.
ஏற்கெனவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன், தற்போது கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக, அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற போட்டிகளில் மாடுபிடி வீரர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 300 ஆக இருக்கலாம்.
எருது விடும் நிகழ்ச்சியில் அதிகபட்சம் 150 வீரர்கள் பங்கேற்கலாம்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திறந்த வெளியின் அளவுக்கேற்ப தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், அதிகபட்சம் 50% அளவுக்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. அனைத்து பார்வையாளர்களுக்கும் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகே அனுமதி வழங்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக்கூடத்தில் கொவிட்-19 தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும்.
பார்வையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதுடன் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதும் கட்டாயமாக்கப்படுகிறது.
இந்தக் கட்டுப்பாடுகள் தொடர்பான விரிவான, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும் என தமிழக அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.