கட்சி தொடங்கப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் இம்மாதத் தொடக்கத்தில் அறிவித்திருந்தார். பின்னர் கட்சி தொடங்குவதாக இல்லை என்று தமது உடல்நிலையைக் காரணங்காட்டி கூறிவிட்டார். அவரது இம்முடிவு குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் உட்பட பலர், தங்களின் உணர்வுகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அவ்வரிசையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், "ரஜினிகாந்த் உடல்நலத்துடன் வாழ வேண்டும். புதிய கட்சி குறித்து அறிவிப்பு வரும் என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், உடல்நிலை சரியில்லை என்ற காரணம் ஏற்புடையது. நாட்டின் நன்மை கருதி மக்களுக்கு நல்லது செய்பவர்களோடு ரஜினிகாந்த் துணைநிற்க வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.
துக்ளக் இதழாசிரியர் குருமூர்த்தி, "தமக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து தாம் எடுத்துள்ள முடிவைப் பற்றி ரஜினிகாந்த் என்னிடம் கூறினார். அம்முடிவு தவிர்க்க முடியாத ஒன்றே. இருப்பினும் அவர் வெளியிட்ட அறிக்கையில், தாம் அரசியலில் நேரடியாக ஈடுபடாமல், தமிழக மக்களுக்குச் சேவை செய்வேன் என்று கூறியிருக்கிறார். 1996ஆம் ஆண்டில் நடந்தது போல் அவர் தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுத்துவார் என்பதே எனது கணிப்பு," என்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
"ரஜினி உடல்நிலை தேறி நீண்டகாலம் வாழ வேண்டும். அவரின் உடல்நிலை மோசமாக இருந்த நிலையிலும் சிலரின் தூண்டுதலால் அவர் கட்சி தொடங்க நினைத்திருந்தார். உடல்நிலை காரணங்களுக்காக அவர் அரசியலைவிட்டு, தள்ளி நிற்பது நல்லதுதான். ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் சிகிச்சை பெறும்போதுகூட உடல்நிலையில் கவனம் செலுத்துமாறு ஸ்டாலின் ரஜினிகாந்திடம் கூறியிருந்தார்," என்று தி.மு.கவைச் சேர்ந்த பொன்முடி தெரிவித்திருந்தார்.
அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் தமது டுவிட்டர் பக்கத்தில், "கடந்த மூன்று ஆண்டுகளாக ரஜினி மக்கள் மன்றத்தில் பணியாற்றியவர்களுக்காக வருந்துகிறேன். தங்களின் தலைவரது வார்த்தையை நம்பியவர்களுக்கும் வருந்துகிறேன். அவரின் ரசிகர்கள், பொதுமக்கள், இதுவரை அவரது பேச்சை நம்பிய எண்ணற்றவர்களுக்கும் வருந்துகிறேன். வணங்கிய ஒருவர், ரசித்த ஒருவர், இப்படி பலவீனமுடையவர் என்பதை உணரும்போது அது வலி தரும் ஒன்றே," என்று பதிவிட்டார்.
தனது உடல்நிலைக்கு முக்கியத்துவம் கொடுத்ததுடன் எந்த ஒரு வறட்டு கௌரவமும் பார்க்காது இப்படி ஒரு துணிச்சலான முடிவை அவர் எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டிருந்தார் வி.சி.க தலைவர் திருமாவளவன்.
ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணன், "அவரின் உடல்நிலை நன்றாக இருந்தால் போதும். அவர் அரசியலில் வந்து சாதிக்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. உடல்நிலை நன்றாக இருந்திருந்தால் கண்டிப்பாக வந்திருப்பார். ஆனால், உடல்நிலை காரணமாக, கட்சி தொடங்க முடியாமல் போனது," என்றார்.
"ரஜினியைப் பொறுத்தவரை அவர் தமிழ்நாட்டின் ஓர் அங்கம். ஒரு நல்ல மனிதர். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அவரின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு ஒரு முடிவுக்கு வந்திருப்பது அவரது சொந்த விருப்பம். இந்த முடிவை விமர்சிப்பதற்கு மற்றவர்களுக்கு உரிமை இல்லை," என்று கூறியிருந்தார் பா.ஜ.கவின் சி.பி.ராதாகிருஷ்ணன்.
இதற்கிடையே சமூக வலைத்தளங்கள் மூலம் ரஜினி ரசிகர்களில் பெரும்பாலானவர்கள், அவரது முடிவை ஏற்றுக்கொண்டு அவர் தமது உடல்நலனைக் கவனித்துக்கொள்வதே முக்கியம் என்று பதிவிட்டு வருகின்றனர்.

