இறந்தவரின் பெயரில் போலியான ஆவணங்களைத் தயார் செய்து ஆஸ்திரேலியாவில் வசிப்பவரின் ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரித்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த சுவாமிநாதன், 65, என்பவர் அடையாறு காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், தமது மேற்பார்வையில் இருக்கும் நிலத்தின் ஆவணங்களை மாற்றி எழுதி இருவர் அபகரித்துக்கொண்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
ரூ.4 கோடி மதிப்பிலான அந்த இடத்தின் உரிமையாளர் நிர்மலின் சந்திரிகா ப்யூட்லர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.
சம்பந்தப்பட்ட மனை எவாலின் கேளிப் என்பவருக்கு சொந்தமானது என்றும், அவர் 1989ஆம் ஆண்டு இறந்து விட்டதால், அவரின் வாரிசுதாரரான நிர்மலின் சந்திரிகா ப்யூட்லர் என்பவர் பெயருக்கு அந்த இடத்தை மாற்றம் செய்து பட்டா பெறப்பட்டது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நிர்மலின் சந்திரிகா ப்யூட்லர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருவதால் அந்த மனையை சுவாமிநாதன் பராமரித்து வந்தார்.
இந்நிலையில், இறந்துபோன எவாலின் கேளிப் வேறு ஒருவருக்கு மனையை அனுபவிக்கவும், விற்கவும் அங்கீகாரம் கொடுத்தது போல போலி ஆவணங்கள் தயார் செய்து மோசடி நடந்துள்ளது தெரியவந்தது.
இந்த மோசடியில் ஈடுபட்டதாக சாலிகிராமம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த நேசன் டிக்சன் கிரிஸ்டோபர், 44, விருகம்பாக்கம், பள்ளிக்கூடம் தெருவைச் சேர்ந்த சிவசங்கர், 45 ஆகிய இருவரை போலிசார் கைது செய்தனர்.

