சென்னை: உள் கட்சிக் குழப்பங்களுக்கு, கோஷ்டி மோதல்களுக்குப் பெயர்போன தமிழக காங்கிரஸ் கட்சியினர் எல்லாரும் சேர்ந்து ஒற்றுமையாக நிர்வகித்து கட்சியை நடத்த ஏதுவாக ஏகப்பட்டவர்களுக்குப் பதவிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
இருந்தாலும் அந்தக் கட்சியில் இன்னமும் குறைகூறல்களும் புகார்களும் முணுமுணுப்புகளும் ஓய்ந்தபாடில்லை என்று கூறப்படுகிறது.
கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு 32 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுச் செயலர் பதவிக்கு 57 பேரும் செயலர் பதவிக்கு 104 பேரும் என புதிய நிர்வாகிகளாக 400க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஆனாலும் பதவி கிடைக்காத கோபத்தில், 'இதனால், எந்த பயனும் இல்லை; அதிகாரமும் இல்லை' என கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மனக்கொதிப்பை வெளிப்படுத்தி புகார் தெரிவித்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
தமிழக காங்கிரஸ் கட்சிக்குப் புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது. ஞானதேசிகன் தலைவராக இருந்தபோது நியமிக்கப்பட்ட நிர்வாகிகளே இப்போதும் நீடிக்கின்றனர்.
இடையில் இளங்கோவன், திருநாவுக்கரசர் இருவரும் தலைவர்களாக வந்து சென்றுவிட்டனர்.
தமிழக காங்கிரஸ் தலைவராக இப்போது பொறுப்பு வகிக்கும் அழகிரி, தனக்குரிய நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்த தீவிர முயற்சி எடுத்தார். அதன் பலனாக 400க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் மேலிடம் அங்கீகரித்துள்ளது.
என்றாலும் துணைத் தலைவர், பொதுச்செயலர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பட்டியலில் முன்னாள் நிதி அமைச்சரின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்துக்கு இடமில்லை.
இதனால், கோபம் அடைந்த அவர், தன் எதிர்ப்பை டுவிட்டர் பக்கத்தில் காட்டியுள்ளார்.
"இவ்வளவு பெரிய குழுவால் எந்த பயனுமில்லை. 32 துணைத் தலைவர்கள், 57 பொதுச் செயலர்கள், 104 செயலர்கள் என நியமிக்கப்பட்ட யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது. அதிகாரம் இல்லாததால் யாருக்கும் பொறுப்பு என்பதும் இருக்காது," என்று அவர் புகார் தெரிவித்தார்.
காங்கிரஸ் மேலிடத்தின் ஒப்புதலுடன் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் வெளியிட்ட பட்டியலுக்கு கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் காங்கிரசில் சர்ச்சை தொடர்கிறது.

