தமிழகத் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்கும் உத்தரவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து திரையரங்குகளும் கொவிட்-19 பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி 50% இருக்கை பயன்பாடு மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் தமிழக அரசு நேற்று அறிக்கை வெளியிட்டது.
படிப்படியாக பல்வேறு தளர்வு நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டு வரும் வேளையில், 50% இருக்கைப் பயன்பாட்டுடன் செயல்பட திரையரங்குகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
“தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத்தினர் 100% இருக்கைப் பயன்பாட்டுக்கு அனுமதி கோரியதையும் திரைப்பட மற்றும் திரையரங்க தொழிலாளர்கள் நலனையும் கருத்தில் கொண்டு 100% இருக்கைப் பயன்பாட்டுடன் செயல்பட திரையரங்குகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது,” என்று தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
“ஆனால், மத்திய அரசின் அறிவுரையைக் கருத்தில் கொண்டும், இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை கருத்தில் கொண்டும், நிலையான வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி அனைத்து திரையரங்குகளிலும் மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படுகிறது,” என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, கூடுதல் காட்சிகளை திரையிட்டுக் கொள்ள திரையரங்கங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் அறிக்கை தெரிவித்தது.