பிரதமர் மோடி குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சித்ததை அடுத்து விமானி ஒருவர் தம் பணியை இழந்துள்ளார்.
அண்மையில் டுவிட்டரில் பிரதமர் குறித்து அந்த விமானி அவதூறாகப் பதிவிட்டதை ஏற்கவே இயலாது என தனியார் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
அனைத்து ஊழியர்களும் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் சமூக ஊடக நடத்தை உள்ளிட்ட கொள்கைகளுக்கு இணங்க வேண்டியது கட்டாயமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள அந்நிறுவனம், அக்குறிப்பிட்ட விமானியின் சேவையை உடனடியாக நிறுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்திய விமானப்படையில் 27 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ள அந்த விமானி, தமது செயலுக்காக டுவிட்டரில் மன்னிப்பு கோரியுள்ளார்.
தனது செயல்பாட்டுக்கும் நிகழ்ந்துள்ள தவற்றுக்கும் தாமே பொறுப்பேற்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அனைத்து பின்விளைவுகளையும் தாம் மனமுவந்து ஏற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

