சென்னை மீனம்பாக்கத்தில் தற்போதுள்ள விமான நிலையத்துக்குப் பதிலாக புதிய முனையம் 2022ஆம் ஆண்டிலிருந்து செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாடு, அனைத்துலக விமான நிலையத்தை இணைக்கும் வகையில் புதிய முனையத்தை அமைக்க கடந்த 2018ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
இதனால் தற்போதுள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது முனையங்கள் இடிக்கப்பட்டு 2,18,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய ஒருங்கிணைக்கப்பட்ட முனையம் உருவாக்கப்படும்.
இந்தப் புதிய முனையம் 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என இந்திய விமான நிலைய ஆணையம் தற்போது கூறியுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “புதிய முனையம் அமைக்கும் இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்படும்.
“முதல் கட்டத்தில் ஏற்கனவே இருக்கும் இரண்டாவது முனையம் இடிக்கப்பட்டு அங்கு புதிய முனையத்தை அமைத்து அதை வருகிற ஜூன் மாதத்துக்குள் செயல்பாட்டுக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
“இரண்டாவது கட்டத்தில் மூன்றாவது முனையம் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் புதிய முனையம் கட்டப்படும்,” என்று ஆணையம் தெரிவித்தது.
இதையடுத்து ஒருங்கிணைக்கப் பட்ட புதிய முனையம், “2022ஆம் ஆண்டு இறுதியில் செயல்பட தொடங்கும்,” என்று ஆணையம் மேலும் கூறியது.
வாகனங்களை நிறுத்த அடுக்குமாடி வசதி, பேரங்காடிகள், கலைஅரங்கங்கள், நவீன வசதிகளுடன் முக்கிய பிரமுகர்களுக்கும் முதியோருக்கும் ஓய்வு விடுதி போன்றவையும் இத்திட்டத்தில் அடங்கும் என்று கூறப்படுகிறது.
2018ஆம் ஆண்டிலேயே தொடங்கிய கட்டுமானப் பணிகள், கொரோனா கிருமி பீதி, ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தி வைக்கப்பட்டன.