சென்னை: புனித தோமையார் மலை, ஆயுதப் படை வளாகத்தில் நேற்று காவலர்களின் குடும்பத்தினருடன் நடைபெற்ற தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தை பிறந்துள்ளதால் நமக்கெல்லாம் வழியும் பிறக்கும் என்று கூறியுள்ளார்.
"சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து தமிழர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்தத் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த இனிய தருணத்தில் எனது ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக் களைக் கூறுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்," என்று முதல்வர் குறிப்பிட்டார்.
பின்னர் காவல்துறைக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளையும் அத்துறையினரின் பங்களிப்பையும் சுட்டிக்காட்டி அவர் பாராட்டினார்.
"தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். நமக்கெல்லாம் அந்தத் தை பிறந்திருக்கின்றது, நமக்கெல்லாம் வழி பிறக்கும் என்ற இனிப்பான செய்தியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார் முதல்வர் பழனிசாமி.
பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் "தமிழ்ச் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள்," என்று குறிப்பிட்டுள்ளார்.
"தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச்சிறந்த பண்டிகை இது. நல்ல உடல் நலமும் வெற்றிகளும் பெறு வோமாக, இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும்," என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

