கொவிட்-19 தடுப்பூசி இயக்கம் தமிழகத்தில் மந்தமாகத் தொடங்கி இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்நாளன்று 166 நிலையங்களில் ஒவ்வொரு நிலையத்திலும் 100 பேர் வீதம் மொத்தம் 16,600 பேருக்குத் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் மாநிலம் முழுவதும் 2,783 மருத்துவர்களும் ஊழியர்களும் மட்டுமே தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர்.
மாநிலத்தின் தலைசிறந்த மருத்துவர்களும் இதர பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்து மற்றவர்களுக்கு ஊக்கமூட்டினர். இருந்தாலும் முதல் நாளன்று ஊசி போட்டுக்கொண்டவர்களின் அளவு 16.8 விழுக்காடுதான் என்று தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி, திருச்சியில் முதல் நாளன்று ஒருவர் கூட ஊசி போட்டுக்கொள்ள முன்வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
சென்னையில்தான் முதல் நாளன்று ஆக அதிகமாக 310 பேர் கோவிஷீல்டு ஊசியைப் போட்டுக்கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இருவர் மட்டுமே அந்த ஊசியைப் போட்டுக்கொள்ள முன்வந்தனர்.
சுகாதாரத்துறையின் புள்ளிவிவரங்களைப் பார்க்கையில், கொவிட்-19 தடுப்பூசி இயக்கத்துக்குத் தமிழ்நாட்டில் தொடக்க ஆதரவு குறைவாகவே இருக்கிறது என்பது தெரியவருகிறது.
ஊசி போடும் இயக்கம் மாநிலம் முழுவதும் பல்வேறு நிலையங்களிலும் இன்றும் தொடர்ந்தது.
இரண்டாவது நாளான இன்று திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி இயக்கத்தைப் பார்வையிட்ட சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தானும் அந்த ஊசியைப் போட்டுக்கொண்டார்.
ஊசி போட்டுக்கொண்ட பிறகு பேசிய திரு ராதாகிருஷ்ணன், கொரோனா கிருமிக்கு எதிரான இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை என்று கூறினார்.
கொரோனா கிருமிப் பரவலை முற்றுலும் ஒழிக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்று கூறிய அவர், தடுப்பூசி போட்டுக்கொள்ள மாநிலத்தில் 600,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போதும் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சுகாதாரத்துறைச் செயலாளரைத் தொடர்ந்து அந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் 14 பேர் கோவேக்சின் தடுப்பூசியையும் 10 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியையும் போட்டுக்கொண்டனர்.
இவ்வேளையில், தமிழ்நாட்டில் இன்று பிற்பகல் நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 610 பேருக்கு கிருமி தொற்றியது உறுதிப்படுத்தப்பட்டது.
அதேவேளையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 775 ஆக இருந்தது. ஆறு பேர் மாண்டனர்.
மாநிலத்தில் கொவிட்-19 கிருமி தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 830,000 ஆக இருக்கிறது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 812,000 ஆக உள்ளது. மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,257 என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.