தாம் வழிகாட்டியாக இருக்கும் மக்கள் பாதை அமைப்பின் இளைஞர்கள் வரும் காலத்தில் அரசியல் களத்திலும் பங்கேற்கக் கூடும் என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் காரனோடையை அடுத்த ஆத்தூரில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் தன் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
அப்போது, “மக்கள் பாதை அமைப்பு தொடர்ந்து சமூக மாற்றத்திற்காக களத்தில் இயங்கி வருகிறது. அடிமைத்தனம் நிர்வாக மாற்றங்களை இது வருங்காலத்தில் உருவாக்கக் கூடும். நான் மிகவும் நேசிக்கக் கூடிய தமிழ் சமூகம் அடிமைத்தனத்திலிருந்து விழித்து எழ வேண்டும். அதை தட்டியெழுப்பும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்ய வேண்டும் என நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்.
“நமது தமிழ் சமூகம் நேர்மையான சமூகமாக இருந்திருந்தால் அது நேர்மையான தலைவர்களை வெளிக் கொண்டு வந்திருக்கும். நேர்மையான தலைவர்கள் இருந்திருந்தால், உலக சமூகங்களிலேயே ஒப்பற்ற சமூகமாக தமிழ் சமூகம் திகழ்ந்திருக்கும். சமூகம் இப்போது அந்த நேர்மையோடு நம் சமூகத்தில் இருப்பதை பார்க்கிறேன். அதனால்தான் மக்கள் பாதை அமைப்பை சேர்ந்த தோழர்கள், இளைஞர்கள் நேர்மைச் சமூகத்தை உருவாக்க களமாடுகிறார்கள்.
“நிச்சயமாக எதிர்காலத்தில் ஒரு நேர்மை சமூகத்தை உருவாக்கும் முடிவுகளை இவர்கள் எடுப்பார்கள். நேர்மையுள்ள தகுதியுள்ள, நேர்மையுள்ள நெஞ்சுரமுள்ள இந்த இளைஞர்கள் அரசியல் களத்திலும் பங்கேற்கக் கூடும்,” என சகாயம் தெரிவித்துள்ளார்.