ரஜினி மக்கள் மன்றத்தில் இருப்பவர்கள் தாங்கள் விரும்பும் எந்தக் கட்சியிலும் இணையலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிட்டத்தட்ட 25 ஆண்டுகாலமாக நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என அவரின் ரசிகர்கள் பொறுமையாகக் காத்திருந்தனர். ஆயினும், 2017 இறுதியில்தான் தாம் அரசியலுக்கு வரப்போவது உறுதி என்று ரஜினி அறிவித்தார். இதை அடுத்து, அவருடைய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
ரசிகர் மன்றங்கள் ‘ரஜினி மக்கள் மன்றங்களாக’ மாற்றப்பட்டு, 2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் களப்பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
2021 ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவேன் என்றும் 2020 டிசம்பர் 31ஆம் தேதி அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் ரஜினி தெரிவித்ததால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்தது.
இந்நிலையில், கடந்த மாதம் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றிருந்தபோது ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, சில நாள்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். அதைத் தொடர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனை, குடும்பத்தாரின் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்த ரஜினி, தாம் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்துவிட்டார்.
இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள், ரஜினி தமது முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால், “எனது இறுதி முடிவை அறிவித்துவிட்டேன். போராட்டங்களில் ஈடுபட்டு என்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்,” என்று அவர் கூறிவிட்டார்.
இதைத் தொடர்ந்து, அரசியலுக்கு வரவில்லை என்றாலும் ரஜினியின் ஆதரவு தங்களுக்குத்தான் என ஒரு சில கட்சிகள் முழங்கி வருகின்றன.
ஆனால், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளில் சிலர் வேறு கட்சிகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். அவ்வகையில், ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் மூவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அண்மையில் அக்கட்சியில் இணைந்தனர்.
இந்த நிலையில், “ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகி, அவர்கள் விருப்பம்போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்துகொள்ளலாம். அவர்கள் வேறு கட்சியில் இணைந்தாலும், எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்துவிடக்கூடாது,” என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.