தமிழகத்தில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எவருக்கும் எந்தப் பக்க விளைவும் ஏற்படவில்லை என்று மாநில சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து இருக்கிறார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று ஆய்வு மேற்கொண்ட திரு ராதாகிருஷ்ணன், “நாளுக்கு நாள் கொரோனா தடுப்பூசிக்கு வரவேற்பு கூடி வருகிறது. நேற்று (நேற்று முன்தினம்) ஒரே நாளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். பொங்கல் விடுமுறை என்பதால் முதலிரு நாள்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை குறைவாக இருந்தது,” என்றார்.
தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக 508,500 கொவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று வரவிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், சுகாதாரப் பணியாளர்களைத் தொடர்ந்து அடுத்த பிரிவு முன்களப் பணியாளர்களைக் கணக்கெடுக்கும் பணி இடம்பெற்று வருவதாகவும் சொன்னார்.