அமெரிக்காவின் துணை அதிபராக இன்று பதவியேற்க உள்ள திருவாட்டி கமலா ஹாரிசின் மூதாதையரின் சொந்த ஊரான தமிழகத்தின் துளசேந்திரபுரத்தில் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
சென்னையிலிருந்து 320 கி.மீ. தூரத்தில் இருக்கும் அந்த கிராமத்தில் சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு திருவாட்டி கமலாவின் தாத்தா வசித்து வந்தார்.
திருவாட்டி கமலா, அதிபராகப் பதவியேற்கவுள்ள திரு பைடன் ஆகியோரது உருவப் படங்கள் பொறிக்கப்பட்ட நாள்காட்டிகள் அங்கு வீடுதோறும் விநியோகிக்கப்பட்டன.
உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் அங்குள்ள ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளைச் செய்ததாகவும் கிராமத்தாருக்கு இனிப்புப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் ஊரெங்கும் பட்டாசுகள் வெடிக்கப்படுவதாகவும் கிராமவாசி ஒருவர் தெரிவித்தார்.
கிருமித்தொற்று மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக வாஷிங்டன் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக இருந்து வரும் நிலையில், துளசேந்திரபுரம் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளது.