தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு இல்லம் பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்படவிருக்கிறது.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது ‘வேதா இல்லம்’ நினைவு இல்லமாக மாற்றப்படும் என 2017 ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
இதையொட்டி இம்மாதம் 28ஆம் தேதி பொதுமக்களுக்கு ஜெயலலிதாவின் இல்லம் திறக்கப்படஉள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
போயஸ் கார்டன் வீட்டை பலர் உரிமை கொண்டாடினர். ஆனால் அதனை நினைவு இல்லமாக மாற்று வதற்கு இழப்பீடாக தமிழக அரசு சார்பில் 68 கோடி ரூபாய் வழங்கப்பட்டு ஜெயலலிதா வாழ்ந்த இல்லம். அரசுடைமை ஆக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, போயஸ் இல்லத்தில் மூன்று முறை ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
பின்னர் ஜெயலலிதா இல்லத்தை பொதுமக்கள் பார்க்கும் வகையில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யலாம் என்பது குறித்து அரசுக்கு இக்குழு பரிந்துரைத்தது.
இதன்படி ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணியைப் பொதுப்பணித்துறை மேற்கொண்டு முடித்துள்ளது.
வீடு முழுவதும் புதிய வர்ணம் அடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் எந்தெந்த பொருட்களை எங்கெங்கு வைக்கலாம் என்பது குறித்து பட்டியலிடப்பட்டுள்ளது.
அதில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள், படித்த புத்தகங்கள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்படுகின்றன. அவரது மார்பளவு கொண்ட சிலைகளும் இடம்பெற உள்ளன.
ஏற்கெனவே சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு்ள்ள ஜெயலிலதா நினைவிடம், சிறையில் இருந்து சசிகலா வெளியேறும் ஜனவரி 27 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மறுநாளே ஜெயலலிதாவின் நினைவு இல்லமும் திறக்கப்படவிருக்கிறது.