சென்னை மெரினா கடற்கரையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜனவரி 27) திறந்து வைத்தார்.
சென்னையில் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மறைந்த ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்ஜிஆரின் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது.
அந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்து நிதியை ஒதுக்கியது. ஈராண்டுகளாக நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகள் முடிவுற்றதையடுத்து, இன்று காலை 11 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஜெயலலிதா நினைவிடம் தொடர்பான கல்வெட்டையும் அப்போது அவர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வை ஒட்டி மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டதையடுத்து அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

