அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் விஜயகாந்தின் தேமுதிக கட்சி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தொடர்பில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, தனித்துப் போட்டியிடுவதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று தமது கட்சித் தொண்டர்களை கேட்டுக்கொண்டார்.
சட்டசபை தேர்தலில் அதிமுக அல்லது திமுகவுடன் கூட்டணி அமைக்க தேமுதிக ரகசிய பேச்சு நடத்தி வருகிறது.
அதிமுகவில் 10 தொகுதிகள் வரை தருவதாக உறுதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பாமகபோல முக்கியத்துவம் தராததால் தேமுதிக தலைமை அதிருப்தி அடைந்துள்ளது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தேமுதிக மண்டல, மாவட்ட, சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தனித்துப் போட்டியிடுவது குறித்து பேச்சு எழுந்துள்ளது.
சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் பிரேமலதா, துணைச் செயலர் சுதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒவ்வொரு ஊராட்சிக்கும் 10 பேர் குழு அமைக்க வேண்டும். 10 ஊராட்சிகளுக்கும் சேர்த்து மற்றொரு குழு அமைக்க வேண்டும். நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தனித் தனியாக குழு அமைக்க வேண்டும். நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வீடுகளில், கட்சிக் கொடி ஏற்ற வேண்டும். சுவர் விளம்பரங்களை அதிகளவில் செய்ய வேண்டும். தேர்தல் பொறுப்பாளர்கள், தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து, கட்சிப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். கட்சி நிகழ்ச்சிகளில் புடவை, வேட்டி வழங்க வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
இதில் பேசிய நிர்வாகிகள் பலரும் பாமக அல்லாத கூட்டணியில் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தினர். இதனை பரிசீலிப்பதாக பிரேமலதா உறுதியளித்து உள்ளார்.
தனித்துப் போட்டியிடும் சூழ்நிலையில் அதற்கும் நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும் என்று பிரேமலதா வலியுறுத்தினார்.

