திருமணத்தின்போது தந்தை இல்லாததை எண்ணி வருந்திய மணமகளுக்கு இன்ப அதிர்ச்சியாக தந்தையின் தத்ரூபமான சிலையை மண மேடைக்கு கொண்டு வந்தார் சகோதரி.
பட்டுக்கோட்டையைச் சேர்ந்த செல்வம் என்பவர் கடந்த 2012ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவருடைய மனைவி கலாவதி.
அவர் உயிருடன் இருக்கும்போதே தம்முடைய 3 மகள்களில் இருவருக்கு திருமணம் செய்து வைத்தார்.
தற்போது மூன்றாவது மகள் லட்சுமி பிரபாவுக்குள் கிஷோர் என்பவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
திருமணத்தின்போது தந்தை இல்லாததை எண்ணி லெட்சுமி பிரபா வருத்தமாக காணப்பட்டார்.
மணமகளின் வருத்தத்தை அறிந்துகொண்ட அவரது மூத்த சகோதரி புவனேஸ்வரி, அவருடைய கணவர் கார்த்திக் ஆகிய இருவரும் லெட்சுமி பிரபாவின் வருத்தத்தை போக்க முடிவு செய்தனர். புவனேஸ்வரி லண்டனில் மருத்துவராக இருக்கிறார்.
பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தந்தையின் தத்ரூபமான உருவச் சிலையை வடிவமைத்தனர். ரூ.6 லட்சம் செலவில் சிலிக்கான் மற்றும் ரப்பரால் இந்த சிலை உருவானது.
பட்டுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற லெட்சுமி பிரபா திருமண வரவேற்பு விழாவின்போது மணமக்கள் முன்பாக தந்தையின் முழு உருவ சிலையை புவனேஸ்வரி திடீரென்று மேடைக்கு கொண்டு வந்து தங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
தந்தையின் சிலையை பார்த்த லெட்சுமி பிரபா கண்ணீர் விட்டு அழுதார்.
பின்னர் தந்தையின் சிலை முன்பு மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டனர். தந்தையின் சிலைக்கு அருகே தாயை நிற்க வைத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர்.
இந்த சம்பவம் விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் நெகிழ வைத்தது.