தமிழகத்தின் உளுந்தூர்ப்பேட்டையில் உள்ள திருமலை வெங்கடேஸ்வரர் கோயில் கட்டுவதற்காக 4 ஏக்கர் நிலப் பட்டாவும், ரூ .3.16 கோடிக்கான காசோலையும் வழங்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு நன்கொடையாக வழங்கினார்.
ஏற்கனவே திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை 3 கோயில்களை பராமரித்து வரும் நிலையில், நான்காவது கோயில் உளுந்தூர்ப்பேட்டையில் வரவுள்ளது. குமரகுரு வழங்கிய இடத்தில் ஏழுமலையான் கோயிலுக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, சென்னை தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் பத்மாவதி தாயாருக்கு 6.85 கோடி ரூபாயில் கோயில் கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. பழம் பெரும் நடிகை காஞ்சனா 30 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த இடத்தை நன்கொடையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திருப்பதி கோயிலின் நிர்வாகம் ஹதிராம்ஜி மடத்தினை சேர்ந்த சேவா தாஸ்ஜியிடம் இருந்தது. 1932ல் மதராஸ் அரசாங்கத்தில் திருமலை இருந்தது. அப்போது 1933ல் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கப்பட்டது .