அங்காடியில் விற்கப்படும் மலிவு விலையிலான பொருள்களை வாங்கிக்கொண்டு பெண் ஒருவர் கன்னியாகுமரியில் நடந்தபடி வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க ஒரு கும்பல் முயன்றுள்ளது.
இதை எதிர்த்து அந்தப் பெண் கூச்சலிட்டுப் போராடி உள்ளார்.
இந்தச் சத்தம் ஊர் மக்க ளின் காதில் விழாமல் இருக்க, பெண்ணை அருகில் இருந்த குளத்துக்குள் தள்ளிவிட்டு திருட்டுக் கும்பல் தப்பி ஓடிவிட்டது.
குளத்தில் நீர் அதிகம் இருந்த நிலையில், பெண் கரையேற முடியாமல் உயிரிழந்தார்.
கொலைக்கு முக்கிய காரண மாக இருந்த மெர்லின் ராஜாவைப் பிடித்த பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்து, அவரை போலிசாரிடம் ஒப்படைத்தனர்.
மக்களால் பலத்த காயமடைந்த மெர்லின் ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், பூந்தோப்பு புன்னத்துவிளை பகுதி யைச் சேர்ந்தவர் வின்சென்ட். கட்டடத் தொழிலாளியான இவரது மனைவிதான் மேரி ஜெயா.
நேற்று முன்தினம் மாலை மூளகுமூடு பகுதியிலுள்ள ‘ரேஷன்’ கடைக்கு மேரிஜெயா சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, அவரது சங்கிலியைப் பறிக்க மெர்லின் ராஜா தனது கூட்டாளிகளுடன் கைவரிசை காட்டியுள்ளார்.
இதையடுத்து, மேரி ஜெயா கூச்சலிடவே, அலறல் சத்தம் கேட்டு மக்கள் திரண்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மெர்லின் ராஜாவும் அவனது கூட்டாளிகளும் மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தில் மேரிஜெயாவை அருகிலுள்ள குளத்தில் தள்ளிவிட்டுள்ளனர்.
மேரி ஜெயா உடல் மீட்கப்பட்டு உடற்கூறு பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தப்பியோடியவர்களைப் போலிசார் தேடி வருகின்றனர்.
மெர்லின் ராஜா ராணுவத்தில் பணியாற்றி ஒழுங்கு நடவடிக்கை காரணமாக வெளியேற்றப்பட்ட வன் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.