பெங்களூருவில் இருந்து நேற்று அதிகாலை சென்னைக்குத் திரும்பினார் சசிகலா. அவருக்கு கட்சிக் கட்டுப்பாட்டையும் மீறி வரவேற்பளித்த ஏழு பேரை முதல்வரும் துணை முதல்வரும் அதிமுகவில் இருந்து நீக்கியுள்ளனர்.
சொத்துக் குவிப்பு வழக்கின் தொடர்பில் நான்காண்டு கால தண்டனையை முடித்துவிட்டு, கொரோனா பாதிப்பில் இருந்தும் மீண்டு ஒருவழியாக நேற்று சென்னை வந்து சேர்ந்தார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா.
வழியெங்கும் அவரது காரின் மீது மலர்களைத் தூவியும் பட்டாசு களை வெடித்தும் வாணவேடிக்கை யுடன் உற்சாகமாக சசிகலாவை வரவேற்றனர் அமமுக கட்சியினர்.
இந்நிலையில், சென்னை வந்த சசிகலா, 66, முதலில் ராமாவரம் தோட்டத்துக்குச் சென்று எம்ஜிஆர், ஜானகி அம்மாள் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அதன்பின்னர் சென்னை தி. நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் வீட்டிற்கு வந்தவர், ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி வணங்கினார்.
இதைத்தொடர்ந்து, தி.நகரில் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறுகையில், “சசிகலாவை பார்க்கத் திரண்ட தொண்டர்களும் மக்கள் கூட்டமும் அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பதை மக்கள் மனதிலிருந்து வெளிப்படுத்தி உள்ளது.
“நடிகர் ரஜினிகாந்த்தும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சசிகலாவின் உடல்நலம் குறித்து விசாரித்தார்,” என்றார்.
இந்நிலையில், முதன்முறையாகச் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா கூறுகையில், “ஜெயலலிதாவின் பிள்ளைகள் என்றுமே எனக்கும் பிள்ளைகள்தான். ஒற்றுமையாக ஓரணியில் நின்று நமது பொது எதிரியை மீண்டும் தமிழக ஆட்சிக் கட்டிலில் அமரவிடாமல் வீழ்த்த இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது எண்ணம், என் குறிக்கோள்.
“எம்ஜிஆர் கட்டிக்காத்து, ஜெய லலிதா வழியில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் இயக்கம் சிலரின் சொந்த விருப்பு வெறுப்புகளால் சிதைந்து விடக்கூடாது. அடக்குமுறை களுக்கு நான் என்றும் அஞ்சமாட்டேன். தமிழக மக்களுக்கும் என் தொண்டர்களுக்கும் நான் அடிமை,” என்று கூறினார்.
இதற்கிடையே, அதிமுக கொடி கட்டிய காரை சசிகலாவிற்கு வழங்கி வரவேற்பு அளித்த கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக நிர்வாகி எஸ்.ஆர்.சம்பங்கி உள்ளிட்ட ஏழு பேரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனி சாமி ஆகியோர் நீக்கியுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
“கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும் கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ஆர். சம்பங்கி, பி.சந்திரசேகர ரெட்டி, ஜானகி ரவீந்திர ரெட்டி, பிரசாந்த் குமார், நாகராஜ், வி. ஆனந்த் ஆகிய நிர்வாகிகளை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகின்ற னர்,” என்று அவர்கள் வெளி யிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.