தமிழக அரசு அண்மையில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் சென்னையில் மட்டும் சுமார் 41 விழுக்காட்டினருக்கு கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில்தான் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 51% பேரை கிருமி தாக்கியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 11 விழுக்காட்டினர் மட்டுமே கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தமிழக பொது சுகாதாரத்துறை சார்பில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் தொடங்கி நவம்பர் மாதம் வரை நடத்தப்பட்ட ஆய்வின்போது 37 மாவட்டங்களில் 26,640 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
அவற்றை ஆய்வு செய்தபோது 31.6 விழுக்காட்டினரை கொரோனா கிருமித்தொற்று தாக்கி இருப்பது கண்டறியப்பட்டது.
தமிழகத்தின் மக்கள் தொகை 70.20 மில்லியன். இதில் சுமார் 20.70 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
“அதாவது தமிழகத்தில் பத்து பேரில் மூவருக்கு கிருமி தொற்றிஉள்ளது. கடந்த அக்டோபர் மாத புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் 670,392 பேருக்கு கொவிட்-19 நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் ஆய்வு முடிவுகளோ அதைவிட 36 மடங்கு அதிகமானோரை நோய் தாக்கி இருப்பதாக தெரிவிக்கின்றன,” என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமிழகத்தின் நகர்ப்புறப் பகுதிகளில் 36.9% பேருக்கும் கிராமப் பகுதிகளில் 26.9% பேருக்கும் கிருமி தொற்றியுள்ளது என்றும் சென்னையில் மட்டும் தொற்று பாதிப்பு மிக மோசமாக இருந்துள்ளது என்றும் அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. சென்னையில் 40.9% பேரை கொரோனா கிருமி தாக்கியுள்ளது. மதுரையில் 38%, திருச்சியில் 32%, கோவையில் 20.4% பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்திருக்க வேண்டும் என்றும் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.