அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியது செல்லாது என்று அறிவிக்கக் கோரி சசிகலா வழக்கு தொடுக்க வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், தாம் சிறைக்குச் சென்ற பிறகு நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி அவர் ஏற்கெனவே தொடுத்திருந்த வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி அவர் நீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சிறையில் இருந்து விடுதலையான பிறகு சசிகலா தரப்பின் அரசியல் நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன. அவர் அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவார் என அவரது ஆதரவாளர்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நடப்பு அதிமுக தலைமைக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்த அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்ற பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை, துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் உருவாக்கப்பட்டன. இதற்காக அதிமுக சட்ட விதிகளும் திருத்தப்பட்டன.
இதனால் சசிகலா தரப்பு கடும் அதிருப்தி அடைந்தது. அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை நீதிமன்றத்தில் சசிகலாவும் தினகரனும் வழக்கு தொடுத்தனர்.
இவர்களது மனுவை விசாரித்த நீதிபதி, தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார். எனினும் அதன் பிறகு இந்த வழக்கில் இருதரப்புமே கவனம் செலுத்தவில்லை.
இந்நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி சசிகலா தரப்பு மிக விரைவில் புதிய மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருப்பதாகத் தெரிகிறது.
மேலும், அதிமுக பொதுச் செயலர் பதவியில் இருந்து தம்மை நீக்கியது செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் சசிகலா தரப்பில் மேலும் ஒரு வழக்கு தொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.