பணம் இல்லையேல் மருத்துவம் பார்க்க வழியில்லை என்று ஏழை மக்கள் பலரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி விடும் நிலையில், 10 ரூபாயை மட்டும் கட்டணமாகப் பெற்றுக்கொண்டு ஏழை மக்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறார் மருத்துவர் லோகேஷ்.
உடல்நலம் பாதித்த யாரும் பணமில்லை என்பதற்காக மருத்துவம் பார்க்காமல் இருக்கக் கூடாது என்பதற்காக சிறிய தொகைக்கு வைத்தியம் பார்க்கும் லோகேஷின் மனது பெரியது என அவரைக் கொண்டாடுகின்றனர், வேப்பனஹள்ளி பகுதி மக்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பன ஹள்ளியைச் சேர்ந்த இளம் மருத்துவரான இவர், கடந்த எட்டு ஆண்டுகளாக அரசு மருத்துவ மனையில் பணியாற்றி வருகிறார்.
அதே ஊரில் சொந்தமாக சிறிய மருந்தகம் ஒன்றைத் தொடங்கி, வெறும் 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வருகிறார் லோகேஷ். 24 மணி நேரமும் இந்த மருந்தகத்துக்கு நாள்தோறும் 150க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்லும் நிலை யில், இன்னும் அதிகம் பேருக்கு சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதே இவரது விருப்பமாகும்.