மதுரை: கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியுள்ளது.
கீழடியிலும் அதன் அருகிலுள்ள கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய நான்கு இடங்களிலும் இந்த அகழாய்வுப் பணி அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழர்களின் 2,600 ஆண்டு பழமை வாய்ந்த சங்க கால நாகரிகத்தை வெளிப்படுத்தும் முயற்சியில் கீழடி அகழாய்வுப் பணி முக்கியத்துவம் வாய்ந்தது என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு கட்ட அகழாய்வின்போது 3,500க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் ஆமை உருவம் பொறித்த சுடுமண் முத்திரை, மிகப்பெரிய விலங்கின் எலும்புக்கூடு, 38 உறைகளைக் கொண்ட பெரிய உறை கிணறு, முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் ஏழாம் கட்ட ஆய்வின்போது மேலும் பல பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கீழடியில் ரூ.12.21 கோடி மதிப்பில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைப்பதற்கான கட்டடப் பணிகளும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே ஆய்வு காலத்தை மேலும் சில மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என்றும் சில தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் மேலும் பல பொருட்களைக் கண்டெடுக்க இயலும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.