புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நான்கு எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தொடர்ந்து ராஜினாமா செய்துள்ளனர்.
இந்த அதிரடி முடிவால் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு எந்நேரத்திலும் கவிழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக புதுச்சேரியில் நமச் சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை விட்டு விலகினர்.
இதையடுத்து, அ.ஜான்குமார் எம்எல்ஏவும் தனது பதவி விலகல் கடிதத்தை நேற்று சபாநாயகர் சிவக்கொழுந்திடம் அளித்தார்.
இந்நிலையில், நாராயணசாமி தலைமையிலான புதுவை அரசைக் கலைப்பதற்கு முடிவு செய்துள்ள தாக புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, அமைச்சர் கந்தசாமி வெளியிட்ட காணொளியில், "புதுச்சேரி அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவியை விட்டு விலக முடிவெடுத்துள்ளனர்.
"ஆளும் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்படு வதால் அமைச்சரவையை நாங்களே கலைத்துவிட திட்டமிட்டுள்ளோம்.
"பிரதமர் நரேந்திர மோடியும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் கடந்த நான்கரை ஆண்டுகளாக காங்கிரஸ் அரசிற்கு பெரும் தொல்லை கொடுத்து வருகின்றனர். இன்னும் இரண்டு வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலக வைத்து, ஆட்சியைக் கலைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
"இதன்காரணமாக, முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவையை முன்கூட்டியே கலைத்துவிட்டு மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வேலைகளில் ஈடுபட உள் ளோம்," என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, முதல்வர் நாரா யணசாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என புதுச்சேரி அதிமுக எம்எல்ஏ அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.
சட்டசபையில் உள்ள 30 இடங்களில் திமுக-காங்கிரஸ் கட்சியின் பலம் 19ஆக இருந்தது. பாகூர் எம்எல்ஏ தனவேலு தகுதிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து ஆளும் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 18ஆக குறைந்தது.
இந்நிலையில், தற்போது 14 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளதால் நாராயணசாமி அரசு கவிழும் சூழல் உருவாகியுள்ளது.

