தமிழகத்தில் புதுக்கோட்டை அருகே மனநிலை பாதிக்கப்பட்ட, வாய்பேச முடியாத 17 வயது பையனை 2019 டிசம்பர் மாதம் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கி மரணத்தை ஏற்படுத்திவிட்ட 34 வயது ஆடவருக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த டானிஸ் பட்டேல் என்ற குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தின்கீழ் மூன்று தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டன.
தண்டனைச் சட்டத்தின்கீழ் ஓர் ஆயுள் தண்டனையும் வேறு சட்டத்தின் கீழ் ஏழாண்டுகள் சிறைத்தண்டனையும் இவருக்கு விதிக்கப்பட்டன.
இவற்றோடு, இந்தக் குற்றவாளி ரூ.30,000 அபராதம் கட்ட வேண்டும் என்றும் வழக்கை விசாரித்த நீதிபதி திருவாட்டி சத்யா தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது பட்டேல் எந்தவித சலனமும் இன்றி காணப்பட்டார். பிறகு இவர் பாதுகாப்புடன் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
புதுக்கோட்டை அருகே கீரனூர் பகுதியில் செயல்படும் கருங்கல் உடைக்கும் படுகையில் வேலை பார்த்து வந்த பட்டேல், அந்தப் பதின்ம வயதுப் பையனை ஏமாற்றி நடமாட்டம் இல்லாத ஒரு காட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்று அங்கு அந்தப் பையனை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
உடலில் பல இடங்களில் பாதிக்கப்பட்ட சிறுவன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 18 நாட்கள் கழித்து மாண்டுவிட்டான்.
இந்த விவகாரம் தொடர்பில் கீரனூர் மகளிர் காவல் நிலைய போலிசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிந்தனர். அதையடுத்து பட்டேல் சிறையில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி குற்றவாளிக்குக் கடும் தண்டனை களை அளித்து தீர்ப்பளித்தார்.
இதே நீதிமன்றத்தில் இதே போன்ற ஒரு வழக்கை இதே நீதிபதி சுமார் ஒரு மாதத்திற்கு முன் விசாரித்தார்.
ஒரு சிறுமியைப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்துவிட்ட ஒரு குற்றவாளிக்கு மூன்று தூக்குத் தண்டனையை நீதிபதி திருவாட்டி சத்யா வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.