ஆசியாவிலேயே ஆகப் பெரிய ஒருங்கிணைந்த கால்நடை ஆய்வுப் பூங்கா சேலத்தில் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அதை தமிழக முதல்வர் பழனிசாமி நாளை மறுநாள் திறந்துவைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ரூ.1,000 கோடி செலவில் 1,100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள அந்தப் பூங்காவில், ரூ.118 கோடி மதிப்பீட்டில் 73.8 ஏக்கர் பரப்பளவில் தமிழகத்தின் ஐந்தாவது கால்நடை மருத்துவக் கல்லூரியும் அமைந்து இருக்கும் என்று மாநில கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஆய்வுப் பூங்காவைப் பார்வையிட்ட அமைச்சர், அங்கு மொத்தம் 20 கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளதாகவும் அவற்றின் மொத்த பரப்பு 3.72 லட்சம் சதுர அடி என்றும் தெரிவித்தார்.
ஆய்வு மையம், கால்நடைப் பூங்கா, கால்நடை மருத்துவக்கல்லூரி, கல்விசார் அலுவலகம், நூலகக் கட்டடம், மாணவ-மாணவிகள் விடுதி, காப்பாளர்கள் கட்டடம், விருந்தினர் அலுவலகம், கால்நடை மருத்துவமனை, உணவகம் முதலான பலவும் அவற்றில் அடங்கும் என்றார் அமைச்சர்.
காவிரி ஆற்றிலிருந்து தனியாக குழாய்கள் பதிக்கப்பட்டு, கால்நடைப் பூங்காவுக்குக் குடிநீர் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதால் எப்போதும் தண்ணீர் வசதி இருக்கும்.
கால்நடைகளின் நல்வாழ்வையும் வளத்தையும் பெருக்கும் முயற்சியாக தேனியில் 6வது கால்நடை மருத்துவக் கல்லூரியும் உடுமலையில் 7வது கல்லூரியும் திறக்கப்படும் என்றாரவர்.

