ஈரோடு: திமுக ஆட்சியில் இருந்தபோதெல்லாம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டதாக அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் பேசிய அவர், நடப்பு ஆட்சியின் கடைசி நேரத்தில் ஏற்கப்படும் அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளும் அடுத்து திமுக ஆட்சி அமைந்த பின்னர் உடனடியாக ரத்து செய்யப்படும் என்றார்.
விவசாயிகள் பிரச்சினையை திசைதிருப்பும் வகையில் பிரதமர் மோடி செயல்படுவதாக அவர் சாடினார்.
“புதுடெல்லியில் 88 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதை திசை திருப்புகிறார் பிரதமர் மோடி.
“தமிழகத்துக்கு வந்தபோது ‘வரப்புயர நீர் உயரும்’ என்று அவ்வையின் பாடலைப் பாடி விவசாயிகளுக்கு செய்த பாவத்தை அவர் திசை திருப்பப் பார்க்கிறார்,” என்றார் ஸ்டாலின்.
திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என்று குறிப்பிட்ட அவர், விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்கப்படும் என்றார்.
“திமுக ஆட்சிதான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தது. அது அப்படியே தொடரும். விவசாயிகள் தொடர்பான அனைத்து திட்டங்களும் அதிகாரிகள் மட்டுமின்றி, விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கொண்ட குழுவினருடன் ஆலோசிக்கப்பட்ட பிறகே நிறைவேற்றப்படும். தமிழக ஒப்பந்ததாரர்கள் யாரும் அதிமுக அமைச்சர்களின் வாக்குறுதிகளை நம்பி ஒப்பந்தம் போட வேண்டாம்,” என்றார் மு.க.ஸ்டாலின்.